சந்திராயன் 3 இறங்கிய இடம் 370 கோடி ஆண்டுகள் பழமையானது: இஸ்ரோ தகவல்..!
இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திராயன்-3 என்ற வெற்றிகரமான விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்த விண்கலம் இறங்கிய இடம் 370 கோடி ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி, சந்திராயன்-3 என்ற விண்கலம் நிலவில் தரையிறங்கியது. மேலும், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. சந்திராயன்-3 தரையிறங்கிய இடத்திற்கு "சிவசக்தி புள்ளி" என்று பிரதமர் மோடி பெயர் வைத்தார்.
இந்த நிலையில், சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடம் சுமார் 370 கோடி ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இடம் வரைபடம் மூலம் தெரியவந்துள்ளதாகவும், கரடுமுரடான பகுதி, சமவெளி பகுதி மற்றும் ஓரளவு சமவெளியாக உள்ள பகுதி என மூன்று தன்மைகள் கொண்ட நிலப்பரப்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 370 கோடி ஆண்டுகளுக்கு பழமையானது என்பது உறுதியாக தெரியவந்துள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேம்பட்ட இமேஜிங் கருவிகளை பயன்படுத்தி, நிலவின் பள்ளங்கள் மற்றும் பாறை அமைப்புகளை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.