வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (17:35 IST)

தொடரும் கழிவுநீர் தொட்டி இறப்புகள்; நிரந்தர தடை விதிக்க அரசு திட்டம்!

இந்தியாவில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் பலர் விஷவாயு தாக்கி இறக்கும் நிலையில் முற்றிலுமாக அதை தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதால் விஷவாயு தாக்கி இறக்கும் சம்பவம் பல நாட்களாக தொடர்ந்து வருகிறது. மனிதர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யக்கூடாது என்று சட்டம் இருந்தாலும் அது கடுமையாக பின்பற்றப்படாமல் உள்ளது.

முன்னதாக கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தப்படுத்தினால் சம்பந்தப்பட்ட தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு புதிய மசோதா ஏற்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி மனிதர்களை கழிவுகளை அள்ள செய்வதை தடுத்தல், முழுவதும் எந்திரங்களை பயன்படுத்துதல், மீறும் தனிநபர், நிறுவனத்திற்கான அபராதம் மற்றும் சிறை தண்டனையை அதிகப்படுத்துதல் ஆகிய புதிய சட்ட திட்டங்களை சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.