செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஜூலை 2024 (11:59 IST)

பட்ஜெட் பாரபட்சம்.! மாநிலங்களவையில் கடும் அமளி.! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!!

Parliment
மத்திய பட்ஜெட்டை கண்டித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
 
மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ஆந்திரா பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. இதை அடுத்து மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
 
இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியதும், மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் முக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய பட்ஜெட்டில் உள்ள பாரபட்சம் குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும் பட்ஜெட்டில்,  சில மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பல மாநிலங்களுக்கு நிதியே ஒதுக்கவில்லை எனவும் அவர் புகார் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் மல்லிகார்ஜுன கார்கே வேதனையுடன் குறிப்பிட்டார்.

Nirmala
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு:
 
அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளிக்க முற்பட்ட நிலையில்,  எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன்,  எனது பதிலையே கேட்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலங்களும் புறக்கணிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

 
பட்ஜெட்டில் எல்லா மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் மகாராஷ்டிராவின் பெயரை பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை ஆனால் அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர் குறிப்பிடவில்லை என்றால் அந்த மாநிலங்கள் புறக்கணித்துள்ளதாக கூறுவது  முற்றிலும் தவறானது என்று அவர் தெரிவித்தார்.