1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (18:50 IST)

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் பாஜக! சோனியா காந்தி ஆதங்கம்..!

மத்திய பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.


 
மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமலில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவைச் சேர்ந்த 141 எதிர்க்கட்சி எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய வரலாற்றில் 141 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல்முறை.

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நாடாளுமன்ற வளாகத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை போலச் செய்தது விமர்சனத்திற்குள்ளானது. இது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் தனது அதிருப்தியும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, மத்திய பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு விட்டதாக காட்டமாக தெரிவித்தார்.  நியாயமான கோரிக்கைகளை எழுப்பியதற்காக முன் எப்போதும் இல்லாத வகையில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் மன்னிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாதது எனவும் அவர் கூறினார். இந்த விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தின் வெளியே பேசி சபையின் கண்ணியத்தை பிரதமர் மோடி அலட்சியப்படுத்தி விட்டதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.