1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (11:25 IST)

11 பேர் விடுதலை.. நீதியின் மீதான நம்பிக்கை சரிந்தது! – பில்கிஸ் பானு வேதனை!

Bilkis Bano
குஜராத்தில் கர்ப்பவதியான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்த வன்முறையில் குஜராத் மாநிலம் ரந்தீக்பூரை சேர்ந்த பில்கிஸ் பானோ என்ற பெண்ணை 11 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. அப்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். மேலும் அந்த கும்பல் பானோவின் உறவினர் ஒருவரையும் அடித்துக் கொலை செய்தது.

இது தொடர்பான வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானோவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கில் குஜராத் அரசு விரும்பினால் குற்றவாளிகளை மன்னித்து விடுதலை வழங்கலாம் என அனுமதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து குஜராத் அரசு அவர்களை மன்னித்து விடுதலை செய்துள்ளது.

குஜராத் அரசின் இந்த செயலுக்கு எதிர்கட்சிகள், பொதுமக்கள் இடையே கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்த விடுதலை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பில்கிஸ் பானு “எனது வாழ்க்கையை சீரழித்த 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது அதிர்ச்சியாக உள்ளது. அவர்களது விடுதலை என் அமைதியை பறித்ததோடு மட்டுமல்லாமல் நீதி மீது நான் வைத்திருந்த நம்பிக்கையும் தகர்த்துவிட்டது. தயவுசெய்து விடுதலை உத்தரவை திரும்ப பெற்று நான் அச்சமின்றி, சுதந்திரமாக வாழ உதவுங்கள்” என கூறியுள்ளார்.