1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (15:56 IST)

இந்தியாவிற்கு 1.5 பில்லியன் டாலர்கள்! – ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

கொரோனாவால் இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவிற்கு கடனளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பலி கொண்ட கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது தீவிரத்தை காட்டி வருகிறது. எனினும் ஊரடங்காலும், முன்கூட்டிய மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகளாலும் இந்தியா கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. எனினும் நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வெகுவாக பாதித்துள்ளனர். அன்றாட வேலைக்கு செல்பவர்களின் பாதிப்பை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் ஏழை மக்களுக்கு நிதியுதவியும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவின் தொழில்வளர்ச்சி விகிதம் மற்றும் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு உதவும் வகையில் 1.5 பில்லியன் டாலர்கள் (ரூபாய் மதிப்பில் 11,300 கோடி) வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதார சுமைகளை முழுவதுமாக சரிசெய்ய முடியாது என்றாலும் ஓரளவு பாதிப்பிலிருந்து விடுபட்டு கொள்ள இந்த கடன் பெரும் உதவியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.