1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (09:43 IST)

5G Auction - முதல் நாளில் 1.5 லட்சம் கோடி-க்கு ஏலம்!

5ஜி சேவை அலைக்கற்றை ஏலத்தில் முதல் நாளில் 1.5 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளது.


இந்தியா முழுவதும் தற்போது 4ஜி சேவைகள் பிரபலமானதாக இருந்து வருகின்றன. இதன் அதிவேக இணைய வசதிக்கு ஏற்ப சந்தையில் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகி வருகின்றன

இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரமாக காத்திருக்கின்றன. அந்த வகையில் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றைக்கான ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.

அதன்படி 5 ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று தொடங்கியது. ஜியோ, ஏர்டெல், வேடோஃபோன் - ஐடியாவுடன் அதானி நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்றன. அலைக்கற்றையை கைப்பற்றும் முனைப்பில் முன்னணி நிறுவனங்கள் மும்முரமாக உள்ளன.

இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டது. இதில், 4 நிறுவனங்களும் ரூ.21,800 கோடி வரை முன்பணம் செலுத்தியுள்ளன. ரிலையன்ஸ் ரூ.16,000 கோடியும், ஏர்டெல் ரூ.5,500 கோடியும், வோடபோன் ரூ.2,200 கோடியும், அதானி டேட்டா நிறுவனம் ரூ.100 கோடியும் முன்பணம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று 5ஜி அலைக்கற்றைக்கு 5வது சுற்று ஏலம் நடைபெறுகிறது. முதல் நாளில் 4 சுற்றுகள் வரை ஏலம் நடந்த நிலையில் 1.45 லட்சம் கோடி ரூபாய் ஏலம் கேட்கப்பட்டதாக ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

ஏலம் இன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏலத்திற்கு பின்பு அலைக்கற்றைகளை ஒதுக்கும் நடைமுறை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நிறைவடையும்  என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.