வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2016 (09:51 IST)

கிஸ் பண்ணிடுவேன் - நதியாவை மிரட்டிய முகேஷ்

மலையாள தனியார் சேனலில் முகேஷ், நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி ஆர்டிஸ்டுமான பிஷாரடி இணைந்து, படாய் பங்களா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.


 

 
பிரபலங்களை வைத்து ஜாலியாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி கேரளாவில் பிரபலம். முகேஷ் மலையாளத்தின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்தவர் என்பதால் பலநேரங்களில் இந்நிகழ்ச்சி நட்சத்திரங்களின் மலரும் நினைவுகளாக அமையும். நதியா பங்கு பெற்ற நிகழ்ச்சியும் அப்படியே அமைந்தது.
 
முகேஷ் நகைச்சுவை வேடங்களை அனாயாசமாக செய்யக் கூடியவர். அவர் முதலில் நதியாவுடன் நடித்தது, 1986 -இல் எடுக்கப்பட்ட ஷாமா என்ற படத்தில். படப்பிடிப்பின் போது நதியாவை ஜோக்குகள் சொல்லி கலகலப்பாக வைத்திருப்பதால், நதியா எப்போதும் முகேஷுடனே இருந்திருக்கிறார். இதில் அனைவருக்கும் பொறாமை.
 
ஒருநாள் அனைவரும் இருக்கையில் நதியா, உங்க மாதிரி யாரும் இப்படி ஜோக் சொல்வதேயில்லை, யு ஆர் ஏ குட் ஜோக்கர் என்று சொல்ல, மொத்த யூனிட்டும் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறது. முகேஷ் எப்போது பல்பு வாங்குவார் என்று அவர்கள் காத்திருந்தார்கள்.
 
அதன் பிறகு முகேஷை பார்க்கும் போதெல்லாம் நதியா ஜோக்கர் என்றே கூப்பிட, முகேஷுக்கு கோபமாகிப் போனது. ஒருநாள் தனியாக அழைத்து, இதோப்பாரு, இனி நீ ஜோக்கர்னு என்னை கூப்பிட்டா, கிஸ் பண்ணிடுவேன் என்று கூறியிருக்கிறார்.
 
அதிர்ந்து போயுள்ளார் நிதியா. அதன் பிறகு முகேஷின் முறை. செட்டில் நதியாவை பார்க்கும் போதெல்லாம், ஜோக்கர்னு சொல்லு என்று அவர் நதியாவை உசுப்ப, அவரோ உதட்டை இறுக மூடிக்கொண்டிருந்திருக்கிறார். கடைசிநாள்வரை அவர் ஜோக்கர் என்று மறந்தும் கூறவில்லை.
 
படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலை காலி செய்து காரில் ஏறிய நதியா, கார் நகரத் தொடங்கிய பிறகு தலையை வெளியே நீட்டி முகேஷைப் பார்த்து, ஜோக்கர் என்று கூவியிருக்கிறார். 
 
பல நேரங்களில் படத்தைவிட அதற்குப் பின்னால் நடக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சுவாரஸியமானவை.