வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. சிவராத்திரி ஸ்பெஷல்
Written By Sasikala

மகா சிவராத்திரியின்போது செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும் என்ன...?

மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தி நாளையே மகா சிவராத்திரியாகப் போற்றிக் கோண்டாடுகிறோம். ‘ராத்திரி’ என்ற சொல்லுக்கு அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று ஈச நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. ஆகவே இந்த புன்ணிய காலத்தில் சிவனின் திருநாமம்  சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விஷேசம்.
இந்தாளின் மூன்றாம் காலத்தில் சிவனை வழிபட்டால், எத்தகைய பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும். இதனால், இந்த ஜென்மம்  மட்டுமல்லாது. மறுஜென்மத்திலும் நிறைவான வாழ்வையும் பெறமுடியும். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நாள் அது.
 
சிவராத்திரி விரதம் எவ்வாறு அனுஷ்டிப்பது?
 
1. முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும்.
 
2. பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம். ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம்  செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
 
3. பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும். அதன் பின், ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக, மலர்கள்,  பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை வழங்கிவிட்டு வீடு திரும்பவேண்டும்.
 
4. வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில்  சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம்.
 
5. இந்த நான்கு கால சிவபூஜையில் அந்தந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும்.  சிவபூஜை செய்ய இயலாதவர்கள்  சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.
 
6. அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம். அல்லது வீட்டிலேயே தேவாரம், திருவாசகம்,  சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களை  சொல்லியும் தியானிக்கலாம்.
 
செய்யக்கூடாதவை
 
1. பகலில் தூங்கக் கூடாது. சிவராத்திரி அன்று கண் விழிக்கவேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.
 
2. சிவராத்திரி உபவாசம் என்பது நியதி. உபவாசம் என்ற சொல்லுக்கு சமீபமாக இருத்தல் என்பது பொருள். ஆகவே, உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையுடன்  இருக்க வேண்டுமே தவிர, தொலைக்காட்சியில் பக்தி படம், பாடல்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் என்றாலும் அதனையும் பார்த்தல் கூடாது.