வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. சிவராத்திரி ஸ்பெஷல்
Written By Sasikala

மகா சிவராத்திரியில் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜை...!!

மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வருகிற ஒரு அதி அற்புத நாளாக மகா சிவராத்திரி தினம் இருக்கிறது. முதல் நாளன்று ஒருவேளை உணவு உண்டு, சுக போகங்கள் அனுபவிக்கும் எண்ணங்களையும், செயல்களையும் தவிர்த்து மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். 
சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது சூரிய பகாவானை வணங்கிய பின்பு, அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று  சிவபெருமானை வணங்க வேண்டும். கோயிலில் வழிபாடு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், பூஜையறையில் சிவராத்திரி பூஜை செய்வதாற்கான இடத்தைச் நன்கு  சுத்தம் செய்து, பூமாலைகள், தோரணங்கள் கட்டி அலங்கரிப்பது நல்லது. 
 
நண்பகலில் நீராடி, உங்கள் வீட்டிலேயே சிவபெருமானுக்கு உச்சி கால பூஜைகளை முடித்து விடவேண்டும். பின்பு உங்கள் வீட்டருகில் இருக்கும் கோயிலுக்கு  சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்கான மலர்கள், பழங்கள், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் இதர பூஜை பொருட்களை தந்து விட்டு மீண்டும்  வீடு திரும்ப வேண்டும். மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, முன்பு பூஜையறையில் சுத்தம் செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த  பீடத்தில் சிறிய அளவில் சிவலிங்கத்தை வைத்து முன்னிரவு தொடங்கி நான்கு ஜாமங்களிலும் சிவ மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து பூஜைகள் செய்ய  வேண்டும். 
 
நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை சிவ லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும்.  திரிகரண சுத்தி மற்றும் ஆச்சாரமாக இத்தகைய சிவ பூஜைகளை செய்ய இயலாதவர்கள். சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டு,  சிவனை வழிபட்டு சிவனருள் பெறலாம். 
 
அன்று இரவு முழுவதும் சில சிவன் கோயில்களில் சிவபுராண உபன்யாசம் நடைபெறும். அந்த உபன்யாசத்தை கேட்பதால் புண்ணிய பலன் பெருகும். மேலும்  உங்கள் வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி கேட்கலாம் அல்லது அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி சிவ தியானம் செய்யலாம்.