வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. சிவராத்திரி ஸ்பெஷல்
Written By Sasikala

மகா சிவராத்திரியின்போது மேற்க்கொள்ளப்படும் பூஜை முறைகள் என்ன...?

நம் முன்னோர்கள் அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் மனவலிமையையும், அறிவின் விழிப்பாற்றலைத் தூண்டவும், மன ஒருமை மற்றும் உடல் இயக்கங்களில் நிதானத்தைக் கொண்டு வரவும் விரதம் மற்றும் பூஜைகள், தியானம் போன்றவற்றைக் கடைபிடித்தார்கள்.
மாதாந்த வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும் வருகின்ற ஏகாதசி திதிகளில் குறைவான உணவுப்பழக்கத்தை கைகொள்வார்கள். துவாதசி  திதிகளில் கிழங்கு உணவு வகைகளைத் தவிர்த்து, உப்பைக் குறைத்து கீரைவகைகளை அதிகமாகச் சேர்ப்பார்கள்.
 
திரியோதிசி நாட்களில் உணவில் எண்ணெய்யை நீக்கி, இனிப்பை கொஞ்சம் சேர்த்து மதியம் 1:30 மணிக்குள் உண்பார்கள். சதுர்தசி திதிகளில்  (மாத சிவராத்திரி) மதிய உணவு அரை வயிறும், இரவு பால் பழம் உணவாகக் கொள்வார்கள். சிலர் சிவ சிந்தனையில் இருந்து பூஜை  அபிஷேக ஆராதனைகளைச் செய்வார்கள். யோக சாதகர்கள் தியானம் மேற்கொள்வார்கள்.
 
மாத சிவராத்திரியில் நடுச்சாமம் (இரவு 12:00 மணி) வரை விழித்திருந்து ஈசனை நினைத்து பூஜைகளோ, தியானமோ மேற்கொள்வார்கள். அதற்குப்பிறகு ஓய்வு எடுப்பார்கள். இவ்வாறாக சிவராத்திரி பூஜையினை மாமாங்க வழிமுறையாக செய்து வந்து 12-வது மாதம் வருகிற மஹா  சிவராத்திரி  (சூரியன் சந்திரனின் வீட்டுக்கு எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் காலம்) அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஈசனை மனதில்  நிறுத்தி சிவ பூஜையினை செய்து மாமாங்க பூஜையினை நிறைவு செய்வார்கள். அதாவது சரியை (ஆன்ம மார்க்கம்) வழியில் உள்ளவர்கள் இரவில் தூங்கி விடும்  அறிவை தூங்காமல் விழிப்பு நிலையில் இருக்கச் செய்வது (தியானம்), இதைக்கடைபிடிப்பதால் உடல்நலமும், மனவளமும் காக்கப்படும்.