வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : ஞாயிறு, 17 மார்ச் 2019 (13:34 IST)

உங்களுக்கும் வேண்டாம் .. எங்களுக்கு வேண்டாம் - முடிவுக்கு வந்த சின்னம் பிரச்சனை !

திமுக ஒதுக்கியுள்ள 2 தொகுதிகளில் ஒன்றில் உதயசூரியன் சின்னத்திலும் மற்றொன்றில் தனிச்சின்னத்திலும் போட்டியிடப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
 

திமுக தலைமையிலானக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான பேச்சுவார்த்தை நடத்திய திமுக அவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது. ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திருப்தியடைந்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லி திமுக வலியுறுத்தியுள்ளது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் சில சலசலப்புகள் எழுந்துள்ளன.

ஏற்கனவே தேர்தல்களில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு இப்போது உதயசூரியனின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு அவர்கள் கட்சிக்குள்ளாகவே பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த தேர்தல்களில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட மோதிரம் சின்னத்தை இம்முறை ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ என்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். அந்தக்கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிடுவதால் மோதிரத்தை அக்கட்சிக்கே வழங்கியது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஈடுபட்ட ஆலோசனையில் ஒருத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் மற்றொருத் தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிடப் போவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுகவும் சம்மதம் தெரிவித்துள்ளது. அதனால் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமா வளவன் தனிச்சின்னத்திலும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவார்கள் எனத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

சின்னம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த் திருமா வளவன் ‘. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஏற்கெனவே சிதம்பரத்தில் தனிச்சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறோம். அதனால் சிதம்பரத்தில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். 2 தொகுதிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு கூட்டணிக் கட்சியான திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரத்தில் போட்டியிடுகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.