செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (15:40 IST)

முடிந்தது வேட்புமனுத் தாக்கல் – தமிழகத்தில் 800 பேர் விண்ணப்பம் !

7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 13 மாநிலங்களில் வேட்பு மனுதாக்கல் நிறைவு பெற்றுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் திமுக மற்றும் அதிமுக ஆகிய அணிகளில் ஒன்று சேர்ந்துள்ளனர். நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.  இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து களப்பணிகளில் மும்முரமாக உள்ளன. இதற்காக வேட்புமனுத்தாக்கல் கடந்த வாரம் ஆரம்பித்தது.

கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் எனப் பலர் ஆர்வமாக வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதுவரை தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதையடுத்து வேட்புமனுத்தாக்கலுக்கான நேரம் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு சற்றுமுன்னர் முடிந்துள்ளது.