வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (18:47 IST)

இனி இந்த மொபைல்கள் ஆன்லைன் விற்பனை கிடையாது??; பிரபல நிறுவனங்களின் அதிரடி முடிவு!

புதிய மாடல் மொபைல்களை இனி ஆன்லைனில் ஆஃபரில் விற்பதில்லை என பிரபலமான ஓப்போ, ரியல்மி, விவோ நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் ஆன்லைன் வர்த்தகதளமான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் ஆன்லைன் விழாக்கால விற்பனையை தொடங்கின. 6 நாட்கள் நடந்த அந்த விற்பனையில் 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்றன இந்த நிறுவனங்கள். அதிலும் லட்சக்கணக்கான மொபைல் மாடல்கள் தள்ளுபடியில் விற்கப்பட்டுள்ளன.

இதை சுட்டிக்காட்டிய அனைத்து இந்திய செல்போன் விற்பன்னர்கள் ஆன்லைன் தளங்கள் இதுபோல சலுகை விலையை அறிவிக்கவோ, விற்கவோ உரிமை இல்லையென்றும், இதனால் செல்போன் கடைகளில் மொபைல் விற்பனை குறைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர். முக்கியமாக ஒவ்வொரு முறையும் புதிய மாடல் மொபைல்களை குறைந்த ஆஃபரில் ஆன்லைனில் வெளியிடும் ஓப்போ, விவோ, ரியல்மீ ஆகிய நிறுவனங்களுக்கும் அவர்கள் இந்த செய்தியை தெரிவித்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்ற இந்த நிறுவனங்கள் ‘இனி ஆன்லைனில் அதிக தள்ளுபடியில் மொபைல்கள் விற்கப்படாது. சாதாரண கடைகளில் எந்தளவு கழிவு தரப்படுகிறதோ அதே அளவே ஆன்லைனிலும் இருக்கும். மேலும் புதிய மாடல் மொபைல்கள் மற்ற மொபைல் கடைகளிலும் கிடைக்கும்போதே ஆன்லைனிலும் கிடைக்குமாறு செய்யப்படும். இந்த திட்டம் 2020 ஜனவரி முதல் அமல்ப்படுத்தப்படும்’ என தெரிவித்துள்ளனர்.

ஆன்லைனில் வேகவேகமாக ஆஃபரில் விற்கப்படும் மொபைல்களை விட கடைகள் மூலமாக சராசரியான வேகத்தில் விற்கப்படும்போது அது மக்களை சரியான விதத்தில் சென்று சேரும் என்று உள்ளூர் வணிகர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து இந்த நிறுவனங்கள் உள்ளூர் வணிகர்களுக்கு இழப்பு ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.