1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By

திருப்பாவை - பாசுரம் 7

மார்கழித் திருப்பாவை பாடல் 7 (பாசுரம்):
 
கீசு கீசென்றெங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய் 
பொருள் :
 
இறைவனின் மேல் கொண்ட மிகுதியான ஈடுபாட்டின் காரணமாக மெய் மறந்து கிடக்கும் ஒருத்தியை எழுப்புவதாக அமைந்த பாடல் இது.
 
எழுந்திரு. இதோ வலியன் பறவைகள் (குருவி) தங்கள் துணையுடன் சேர்ந்து `கீசுகீசு' என்று பேசும் ஒலி, எல்லா இடங்களிலும் கேட்கிறது பார்.  அது உன் காதில் விழவில்லையா? நறுமணம் வீசும் கூந்தலைக் கொண்ட ஆய்ச்சியர்கள் (தாங்கள்) அணிந்திருக்கின்ற காசுமாலை, பலவகை வடிவங்களாகச் செய்து கோக்கப்பட்ட மாலை, ஆகியவை சப்தமிடும்படியாக, கையை முன்னும் பின்னும், மாற்றி மாற்றித் தயிர் கடைகின்ற  ஓசை உன் காதில் விழவில்லையா?
 
எங்களுக்கெல்லாம் தலைவியான நீ, இப்படிச் செய்யலாமா? நாங்கள் யாரைப்பற்றிப் பாடிக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? நாராயணனை, பல யுகங்களிலும் பலவிதமான திருமேனிகள் கொண்டு அவதரித்த சுவாமியை, கேசியென்னும் அரக்கனைக் கொன்ற கண்ணனை-இப்படிப்பட்ட சுவாமியை, நாங்கள் புகழ்ந்து பாடுவதைக் கேட்கும் நீ இப்படிப் படுத்துக் கிடக்கலாமா?
 
ஒளியை உடையவளே! கதவைத் திற.
 
                                                                                                                                                                                                                                                                                                        விளக்கவுரை : ஸ்ரீ.ஸ்ரீ