வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (00:32 IST)

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை!

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இச்சிவாலயம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார்.
 
அவருடைய அடியைத் தேடி திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்துச் சென்றார். பிரம்மா சிவபெருமானின் முடியைத் தேடி அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும்.
 
திருவண்ணாமலை கிருதயுகத்தில் இம்மலை அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில்  தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞானிகள் சித்தர்கள், பார்வையில் மரகத மலையாகவும், பாமர மக்களுக்கு கல்  மலையாகவும், காட்சி தருகிறது, இம்மலையில் ஏராளமான மூலிகைகளும் குகைகளும் உள்ளன, இம்மலை சித்தர்கள் வாழும் சதுரகிரி மற்றும் அகத்தியர் வாழும் பொதிகை மலை, சேர்வராயன் மலைகளை விட மிகவும் சிறப்பு பெற்றது.
 
சிவனின் பஞ்ச பூத தலங்களில் இது அக்னி தலமாகும், மற்றவை சிதம்பரம் ஆகாயம், காளகஸ்தி வாயு, திருவானைக்கால் நீர் தலம், காஞ்சி நிலம் இவற்றில் இறைவன் அக்னியாக காட்சி தருகிறார் இங்கு, இம்மலை இமயமலையை விட மிகவும்  பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இம்மலை ஈசானம் தத்புருஸம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்  எனும் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் பஞ்சகிரியாக காட்சி (பஞ்சலிங்கம்) தருகிறது, இக்காட்சியை கிரிவலம் வரும்போது குபேரலிங்கம் தாண்டியவுடன் காணலாம்.
 
திருமால் பிரம்மா ஆகியோரின் அகந்தையை நீக்க சிவபெருமான் லிங்கோத்பவராக ஜோதிப் பழம்பாக காட்சி தந்த திருத்தலம்  இது. இந்த ஜோதி திருவுருவத்தின் வெம்மை தாங்காமல் தேவர்கள் வருந்தி துன்பப்படவே சிவபெருமான் மலையாகி நின்றதாக புராணங்கள் கூறுகின்றன. இம்மலையில் தவமிருந்த பார்வதி தேவிக்கு சிவபெருமான் தன் உடலில் பாதி இடத்தை அளித்து  அர்த்தநாரீஸ்வராக காட்சி கொடுத்த தலமும் இங்கேதான். இம்மலை உச்சியில் தீபம் ஏற்றி வலம் வந்த சிறப்பினை  பார்வதிதேவி பெற்ற நாள் திருக்கார்த்திகை என்கிறது புராணம்.