பெருமாள் பக்தி: புரட்டாசி மட்டுமல்ல, எல்லா சனிக்கிழமைகளும் வரம்தரும் நாளே! - வேங்கடவனை வழிபடும் முறை!
பெரும்பாலானோர் புரட்டாசி சனிக்கிழமைகளை மட்டுமே பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதுகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால், உலகளந்த பெருமாளுக்கு எல்லா சனிக்கிழமைகளுமே மிகவும் உகந்த நாட்கள்தான். சனீஸ்வர பகவானையே ஆளும் ஆற்றல் கொண்டவர் பெருமாள். ஆகவே, உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, வேங்கடவனாம் பெருமாளை சனிக்கிழமைகளில் உள்ளன்போடு வணங்கினாலே போதும், அனைத்து வரங்களும் உங்களைத் தேடி வரும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு சனிக்கிழமையன்றும், காலை மற்றும் மாலை என இருவேளையும், உங்கள் பூஜை அறையில் விளக்கேற்றுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் அவல் வைத்து, மனமுருகி பெருமாளுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். உங்களிடம் சிறிதளவு துளசி இருந்தால், அதனைப் பெருமாளின் திருப்பாதங்களில் தூவி வழிபடுவது மேலும் சிறப்பு.
உங்களால் இயன்ற அளவுக்கு, அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். இது மிகுந்த பலனை தரும். முக்கியமாக, ஏகாதசி வழிபாட்டை தவறாமல் மேற்கொள்ளுங்கள்.
பெருமாள் வழிபாட்டின்போது விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால், நீங்கள் இழந்த செல்வங்கள் அனைத்தையும் அந்த வேங்கடவன் பெருமாள் உங்களுக்கு மீண்டும் தந்தருள்வார் என்பது நம்பிக்கை.
Edited by Mahendran