ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (11:12 IST)

சிவபெருமானுக்குரிய பிரதோஷ வழிபாட்டை எவ்வாறு கடைப்பிடிக்கவேண்டும்...?

Pradosham
சிவபெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது, இன்று செவ்வாய்க்கிழமையில் வருகின்ற  பிரதோஷம்.


இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளிகளை படித்து, முடிந்தவரை மவுன விரதம் இருந்து, மாலையில் கோவில் சென்று, சிவதரிசனம் செய்யவேண்டும். அதோடு நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும்.

சாதாரண நாட்களில் ஒருவர் ஆலயத்திற்கு வரும்போது, மூன்று முறை வலம் வருவார்கள். அதுவே பிரதோஷ தினத்தில், ‘சோம சூக்தப் பிரதட்சணம்’ முறையில் வலம் வர வேண்டும்.

திருப்பாற்கடலை கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷம், தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள். இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று எண்ணிய தேவர்களை, ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள், வந்த வழியே திரும்பினர். ஆலகால விஷம் அந்த பக்கத்திலும் எதிர்த்துச் சென்று பயமுறுத்தியது. இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாய் வந்த அந்த நிகழ்ச்சிதான் ‘சோமசூக்தப் பிரதட்சணம்’ எனப் பெயர் பெற்றது.

முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிகொண்டு, அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சன்னிதி வரை சென்று, அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். அப்படி செய்தால் ‘அசுவமேத யாகம்’ செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்தபின் வீட்டிற்குச் சென்று உணவருந்தல் வேண்டும்.