1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : புதன், 29 ஜூன் 2022 (18:06 IST)

முடி உதிர்வை தடுத்து வளர்ச்சிக்கு உதவும் கருஞ்சீரக எண்ணெய் !!

Karunjeeragam Oil
கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கருஞ்சீரக எண்ணெய் சிறந்த தீர்வாக உள்ளது.


கருஞ்சீரகத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வை போக்கி வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி வறட்சி, வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கிறது. இந்த எண்ணெய்யை இரண்டு முறைகளில் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

குறிப்பு 1: கருஞ்சீரகம் 100 கிராம், வெந்தயம் 100 கிராம், தேங்காய் எண்ணெய் 150 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். கருஞ்சீரகத்தையும், வெந்தயத்தையும் மிக்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பொடியை சிறிய பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும். அடுப்பில், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரில் தேங்காய் எண்ணெய்க் கலவை அடங்கிய சிறிய பாத்திரத்தை வைத்து, சூடுபடுத்த வேண்டும். இந்த முறையில், எண்ணெய் தயாரிப்பதற்கு சற்று கூடுதல் நேரம் தேவைப்படும்.

பின்பு காய்ச்சிய எண்ணெய்யை ஆறவைத்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி 3 முதல் 4 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். இதைத் தினமும் பயன்படுத்தலாம்.

குறிப்பு 2: கருஞ்சீரகம் 1 டீஸ்பூன், வெந்தயம் 2 டீஸ்பூன், கற்றாழை ஜெல் 1 கப், தேங்காய் எண்ணெய் 1 கப் எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழையின் தோலை நீக்கி, நடுவில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாகக் கழுவ வேண்டும். அப்போதுதான், அதிலுள்ள அரிப்புத் தன்மை நீங்கும்.

அடுப்பில், வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய்யையும், கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். எண்ணெய் கொதிக்கும் போது, கருஞ்சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான சூட்டில், அரை மணி நேரம் வரை காய்ச்ச வேண்டும். இதை, வாரம் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாக மசாஜ் செய்து குளிக்கும்போது, உடல் சூடு குறைந்து குளிர்ச்சி ஏற்படும். தொடர்ந்து 1 மாதம் வரை பயன்படுத்தும் போது, முடியின் வளர்ச்சி நன்றாகத் தூண்டப்பட்டு, அடர்த்தியாக முடி வளரும்.