வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (14:42 IST)

இந்தியாதான் இலக்கு - விற்பனையாளர்களுக்கு வலை விரிக்கும் க்ளப் ஃபேக்டரி

சீன ஆன்லைன் மார்க்கெட் நிறுவனமான க்ளப் ஃபேக்டரி தனது நிறுவனத்தை இந்தியாவில் வலுப்படுத்துவதற்காக விற்பனையாளர்களை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆன்லைன் விற்பனை தளங்களில் பிரபலமான நிறுவனம் க்ளப் ஃபேக்டரி. சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த தளத்திற்கு இந்திய வாடிக்கையாளர்களிடையே கணிசமான ஆதரவு இருந்து வருகிறது. தற்போது இந்திய விற்பனையாளர்களை க்ளப் ஃபேக்டரியில் இணைப்பதற்காக முயற்சித்து வருகிறது. இதற்காக விற்பனையாளர்கள் இணைப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறது க்ளப் ஃபேக்டரி.

விற்பனையாளர்களுக்கு பொருட்கள் விற்பது, சலுகைகள் வழங்குவது போன்ற பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் மற்ற ஆன்லைன் தளங்களில் பொருட்கள் விற்பவர்களை விட 20% அதிக லாபத்தை விற்பனையாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது. இதனால் விற்பனையாளர்கள் நிறைய பேர் க்ளப் ஃபேக்டரியில் இணைய ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்டு மாதத்தில் நடைபெற இருக்கும் விற்பனையாளர்கள் சேர்ப்பு சந்திப்பில் அழகு பொருட்கள், தொழில்நுட்ப சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் விற்பனையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.