1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 ஆகஸ்ட் 2020 (11:37 IST)

விலை கட்டுப்படியாகல.. விலையேறும் ரீசார்ஜ் ப்ளான்கள்! – பதட்டத்தில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள்!

இந்தியா முழுவதும் அதிகம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் ப்ளான் விலையை அதிகரிக்க போவதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குறைந்த விலையில் அதிக டேட்டா ப்ளான்களை அளிக்கும் நெட்வொர்க் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனமும் ஒன்று. இந்தியாவில் அதிக அளவில் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ள ஏர்டெல், ஜியோ இடையே வாடிக்கையாளர்களை ஈர்க்க போட்டிகள் நடைபெறுவது வாடிக்கை.

தற்போது கொரோனா சூழலால் பொருளாதார சரிவு, வேலையின்மை போன்றவற்றால் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏர்டெல் நிறுவனம் மட்டுமல்லாது பிற நிறுவனங்களும் இழப்புகளை சந்தித்து வருவதால் ரீசார்ஜ் ப்ளான் விலையை ஏற்ற ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள பாரத் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் “ஏர்டெல் பயனாளர்கள் மேலும் அதிகமாக பணம் செலுத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும். தற்போது 16ஜிபி டேட்டா 160 ரூபாய்க்கு கிடைத்து வரும் நிலையில் இனி வரும் காலங்களில் இந்த விலைக்கு 1.6ஜிபி மட்டுமே கிடைக்க வேண்டி வரலாம். நாங்கள் அமெரிக்கா ஐரோப்பா போல டேட்டாவிற்காக 50-60 டாலர்கள் வசூலிக்கவில்லை. அதேசமயம் இவ்வளவு குறைந்த விலையிலும் தொடர்ந்து சேவையை வழங்க இயலாது” என்று கூறியுள்ளார்.

இதுநாள் வரை ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை ரூ.45 முதல் தொடங்கும் நிலையில், இனி குறைந்தது ரூ.100 ஆவது செலுத்த வேண்டி வரும் என கூறப்படுகிறது. இந்த செய்தி ஏர்டெல் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.