வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பண்டிகைகள்
Written By Sasikala

ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன...?

மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக கேரளா இருந்தது. மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வழங்கி பொற்கால ஆட்சி  நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) வழிநடத்தி  வந்தார்.

விஷ்ணுதான் வாமன அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்துகொண்டார் சுக்கிராச் சாரியார். வாமனனாய் வந்திருப்பது சாட்சாத்  மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே என்று மகாபலியை  எச்சரித்தார்.
 
‘மூன்றடி நிலம்தானே.. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் மகாபலி. ‘நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடு’ என்றார் வாமனன்.
 
தாரை வார்ப்பதற்காக கமண்டல நீரை சாய்க்கத் தொடங்கினார். குரு சுக்கிராச்சார் வண்டாக மாறி கமண்டலத்தின் துளையை அடைத்துக் கொண்டார். சுக்கிரனின் இந்த காரியத்தை தெரிந்துகொண்டார் வாமனன். கையில்  இருந்த தர்ப்பையை எடுத்து கமண்டல துளையில் குத்தினார். வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார். கமண்டலத்தில்  இருந்து நீர் வெளியேற, அதை தன் கையில் பிடித்து மூன்றடி நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்தார் மகாபலி.
 
குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி  அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?’ என்றார்.
 
‘உலகை அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு.
 
மகாபலி பெற்ற வரத்தால் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அதனால்தான், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.