1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (17:34 IST)

இலங்கையின் ஆஃபரை ஒதுக்கி தள்ளிய பிசிசிஐ!

ஐபிஎல் குறித்த இலங்கையின் ஐடியாவை பிசிசிஐ நிராகரித்துள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்க இருந்தது. ஆனால் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  
 
இதனையடுத்து ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஐபிஎல் போட்டி மாற்றப்பட்டது. ஆனால் மீண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதை அடுத்து 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை அதிகாரபூர்வமாக தள்ளி வைப்பதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஐபிஎல் போட்டி தொடர் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
2020 ஐபிஎல் தொடர் நடக்காமல் போனால் ரூ. 3000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், 2020 ஐபிஎல் தொடரை, எங்கள் நாட்டில் நடத்திக்கொள்ளுங்கள் என இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. 
 
ஆனால், பிசிசிஐ தற்போது உள்ள சூழ்நிலையில் இது குறித்து ஆலோசிப்பதில் பயனில்லை என தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் ஐடியாவை பிசிசிஐ நிராகரித்துள்ளதாகவே தெரிகிறது.