ஐசிசி தலைவராக இருந்துகொண்டு ஜெய் ஷா இப்படி செய்யலாமா?... எழுந்த விமர்சனங்கள் !
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகளாக ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் பெற்று வந்த தொடர் தோல்விகளுக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நேற்றைய போட்டியில் ஆஸி அணி நிர்னயித்த 265 என்ற இலக்கைத் துரத்திய போது மிகவும் பொறுப்புடன் ஆடி 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்தார் ஆட்டநாயகன் கோலி. அவருக்குத் துணையாக கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பாண்ட்யா ஆகியோரின் ஆட்டமும் அமைந்தது.
இந்திய அணி வெற்றி பெற்றபோது மைதானத்தில் இருந்த ஐசிசி தலைவரான ஜெய் ஷா அதை வெளிப்படையாகக் கொண்டாடி மகிழ்ந்தார். ஜெய் ஷா இந்தியாவை சேர்ந்தவராக இருந்தாலும், ஐசிசி தலைவராக இருக்கும் போது எப்படி ஒரு அணியின் வெற்றியை அவர் இப்படிக் கொண்டாடி மகிழலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.