1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 14 ஜூலை 2014 (12:31 IST)

டிராவில் முடிவடைந்த இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 457 ரன்களும், இங்கிலாந்து அணி 496 ரன்களும் எடுத்தன.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது.

8 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்த விராட் ரன் எதுவும் எடுக்காத நிலையிலும், ரஹானே 24 ரன்களிலும் வெளியேறினர். அணியின் கேப்டன் தோனி 11 ரன்களிலும், ரவிந்திர ஜடேஜா 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் கவனமாக விளையாடிய ஸ்டூவார்ட் பின்னி 78 ரன்கள் சேர்த்தார். புவனேஷ்வர் குமார் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்திருந்த போது இரு அணிகளும் டிராவுக்கு ஒப்புக்கொண்டன. இதனால் ஆட்டடம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் 17 ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.