வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (21:42 IST)

பெண்கள் உடையால் பள்ளி மாணவர்கள் மனம் தடுமாறுகிறார்களா?

இலங்கையிலுள்ள ஆண்கள் பள்ளிக்கூடத்தின் அறிவிப்பு பலகையில் காணப்படும் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்ற விவரங்கள் சமூக வலைதளங்களில் சூடான விவாதங்களை எழுப்பியுள்ளது.
 

சேலைகள் பெண்கள் உடலின் பல பகுதிகளை வெளிக்காட்டும்
 
இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள மக்கள் இது தொடர்பாக ஏன் கோபமடைந்துள்ளனர் என்பதை பிபிசியின் ஆயிஷா பெரேரா விளக்குகிறார்.
 
இதனை பார்த்தவுடன், இக்கால அழகை விவரிக்கும் தரமற்ற பத்திரிகையின் பக்கம் என்று நீங்கள் நினைத்தால், உங்களை மன்னித்துவிடலாம்.
 
கொழும்பின் உயர்தர தனியார் பள்ளிகளில் ஒன்றான புனித ஜோசப் கல்லூரியில் அனைவரும் பார்க்க, வைக்கப்பட்டிருந்த அந்த அறிவிப்பு பதாகையில் எந்த எழுத்துக்களும் இல்லை.
 
மாறாக, வேறுபட்ட உடைகளில் 16 பெண்களின் படங்களை கொண்டிருக்கும் அதில், பாதி படங்களுக்கு சரி என்ற அடையாளமும், மீதி பாதி படங்களுக்கு தவறு என்ற அடையாளமும் வழங்கப்பட்டிருப்பதை காணலாம்.
 
இது விபத்தாய், தற்செயலாக நிகழ்ந்தவிட்ட ஒன்றல்ல. கொழும்பில் இப்போது இது நாகரீகமும் அல்ல.
 
மாறாக, பெண்கள் இந்த பள்ளிக்கூடத்திற்குள் ஆசிரியர்களை சந்திக்க வரும்போது அல்லது தங்களுடைய குழந்தைகளை பள்ளியிலிருந்து கூட்டிச்செல்ல வரும்போது, என்ன உடைகளை அணியலாம், எவற்றை அணியக் கூடாது என்பதை விளக்குகின்ற அறிவிப்பு பலகை.
 
பாரம்பரிய சேலை அணிவது அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல உருவின்றி தயாரிக்கப்பட்ட ஆடை அணிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் ஆடைகள் போல தோன்றுபவை அனுமதிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்படாதவற்றில் வார் பட்டை மேலுடைகள், குட்டை பாவாடைகள் மற்றும் கையில்லாத ஆடைகள் அடங்குகின்றன.
 
புனித ஜோசப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் ஒரு படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய பிறகு இது பற்றிய கோபம் அனைவரையும் தொற்றிக் கொள்ள தொடங்கியது.
 
பள்ளியின் வளாகத்திற்குள் நுழைகின்ற பெண்கள் அணிந்து வர வேண்டிய கட்டாய ஆடை முறை பற்றி புனித ஜோசப் பள்ளியின் நிர்வாக ஊழியர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
 
“பள்ளிக்குள் அவர்கள் வர வேண்டும் என்றால், அவர்கள் பொருத்தமான ஆடை அணிந்திருக்க வேண்டும்” என்று அந்த ஊழியர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
இது புனித ஜோசப் பள்ளியில் மட்டுமே நடைபெறுவதில்லை. கொழும்பிலுள்ள இன்னொரு தனியார் கல்வி நிலையமான புனித பீட்டர் கல்லூரி வாயிலின் வெளியே இது போன்றதொரு அறிவிப்பு இருப்பதாக இந்த கல்வி நிலையமே உறுதிப்படுத்தியிருக்கிறது.
 
“இது மாணவர்களுக்கான பள்ளி மட்டுமே. ஓர் அறிவிப்பு வைத்திருப்பதால், பெண்கள் எதை அணியலாம் எவற்றை அணியக் கூடாது என்பது பெண்களுக்கு தெரிந்திருக்கும்” என்று அலுவலக உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இதற்கு கட்டுப்படாத பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுவிடுவார்கள்.
 
வயிற்று பகுதியை காட்டும் ஆடைகள் அணியலாமா?:
 
இந்த சுவரொட்டிக்கு மறுமொழியாக அமைந்த பல பதில்கள் எல்லாம் கோபத்தை வெளிப்படுத்தின. “நல்லது... இப்போது நாம் சரியாக பின்னோக்கி செல்கிறோம்” என்றது ஒரு குறிப்பு.
 
இன்னொருவர் இதற்கு எதிர்ப்பை காட்டும் விதமாக எல்லா பெண் ஊழியர்களும், மாணவரின் பெற்றோரும் ”ஆண்களின் தேசிய மலேய அணியிலும் அல்லது நீச்சல் உடையிலும் வந்தால் எப்படி இருக்கும்” என்று பரிந்துரைத்தது.
 

காரசாரமான விவாதத்தை சமூக வலைதங்களில் உருவாக்கியுள்ள அறிவிப்பு பலகை
 
“சர்வதேச பள்ளிகள்” உள்பட மற்ற பல பள்ளிகள் கைகளில்லாத ஆடைகளை அணிவதை தவிர்க்க சொல்வதாக சில பெற்றோர் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது பற்றி அவை பெரிய சுவரொட்டி வைப்பதில்லை என்கின்றனர்.
 
வலது பக்கத்தி்ல் முதலாவதாக அனுமதிக்கப்பட்ட ஆடைகளின் வரிசையில் உள்ள பாரம்பரிய ஆடையான சேலை பெண்களின் வயிற்றுப் பகுதியை வெளிக்காட்டும்போது, வார் பட்டை உடைகள் மற்றும் கையில்லாத ஆடைகளை தடைசெய்திருப்பதன் முரண்பாட்டை பிறர் குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.
 
“ஜீன்ஸ் இல்லை? உடல் இறுக்க உடை இல்லை? கையில்லாத உடைகள் இல்லை? ஆனால், வயிற்றுப்பகுதியை வெளிகாட்டும் சேலைகளை அணியலாம். அது வயிற்று பகுதிளை வெளிக்காட்டுவதால் எப்பிரச்சனையும் இல்லை. வயிற்றுப் பகுதியை விட கைப் பகுதி ஆபாசமானது என்று யார் முடிவு செய்கிறார்கள்? அல்லது ஜீன்ஸை விட பேன்ட்டுகள்? என்று யார் தீர்மானிக்கிறார்கள்? நாம் வெப்பமண்டல நாட்டில் வாழ்கிறோம் என்று அவர்கள் உணர்கிறார்களா? மேலும், ஆண்களுக்கான இத்தகைய அறிவிப்பு பலகை எங்கே?“ என்கின்றனர் பலரும்.
 
இளம் தாய்மார் மற்றும் “பொருத்தமற்ற ஆடைகள்”:
 
அரசால் நடத்தப்படுகின்ற ஆண்களுக்கான பள்ளிகளில் பெண்கள் நுழைகின்றபோது, சேலை கட்டுவது ஆடை முறையாக உள்ளது. புனித பீட்டர் மற்றும் புனித ஜோசப் போன்ற தனியார் பள்ளிகளில் அவ்வாறு கட்டாயப்படுத்துவது புதிய நிகழ்வாகும்.
 
16 ஆண்டுகளுக்கு முன்னர், நான் மாணவராக இருந்தபோது இலங்கையில் இத்தகைய வினோத அறிவிப்பு பலகைகள் ஏதுவும் இருக்கவில்லை. என்னுடைய தாய் என்னை சந்திக்க வரும் போதெல்லாம், தற்போது புதிய ஆடை முறையில் தவறான வரிசையில் உள்ள ஆடைகளான, முட்டி அளவு பாவாடை அல்லது அதை விட குட்டையானது உள்பட மேற்கத்திய உடையில் தான் வருவார்.
 
தங்களுடைய பள்ளிக்கு வருகின்ற பெண்களிடம், அவர்கள் எதை அணிய வேண்டும், எதை அணியக் கூடாது என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று தெரியவில்லை.
 
கொழும்பு நகரில் மத்திய தர வர்க்கம் விரிவாகி வருவதால் அதிகரித்து வருகின்ற பிற்போக்கு மதிப்பீடுகள் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியானால், இத்தகைய தனியார் பள்ளிகள் மிகவும் பாரம்பரிய பின்னணியை கொண்டிருப்போருக்கு இப்போது திறந்திருப்பது வெளிப்படுகிறது.
 
2009 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்த பிறகு, பிற்போக்கு மதிப்பீடுகளில் எழுச்சி தோன்றியிருப்பது உண்மை. அதிக தேசியவாத அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, கொழும்பிலுள்ள நாகரீகப் பெண்களிடம் காணப்படும் குணநலன்களில் அதிருப்தி காணப்படுகிறது.
 
சில ரசிகைகளின் நடத்தையால் என்ரிக் இக்லெசியாஸ் இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கசையால் அடிக்கப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியதிலிருந்து இந்த அதிருப்தி எண்ணம் வெளிப்படுகிறது.
 
பல பெற்றோர் குறிப்பாக இளம் தாய்மார் ஆண்களின் பள்ளிகளுக்கு வருகின்றபோது பொருத்தமற்ற ஆடைகளை அணிந்து வருவதால் ஆடை முறை அவசியம் என்று தன்னுடைய பெயரை கூற விரும்பாத மகளிர் பள்ளி ஆசிரியை ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
என்ன அணிய வேண்டும்? எதனை அணிய கூடாது? என்று பெற்றோரிடம் எடுத்துச் சொல்லும் முறை எதிர்ப்புக்குரியது என்று தெரிவித்த அவர், இந்த சுவரொட்டியின் பின்னால் இருக்கும் காரணத்தை புரிந்திருப்பதாக கூறினார்.
 
.... மற்றும் மாணவர்களும் அவர்களின் ஹார்மோன்களும்:
 
பெண்களிடன் இத்தகைய ஆடை வெளிப்பாடு இருந்தால், பெரிய மாணவர்களின் நடத்தைகளில் சிக்கல்கள் தோன்றலாம் என்று சிலர் கவலைப்படுகின்றனர்.
 
“எப்படியும் தனியாக பிரிக்கப்பட்டுவிடும் இந்த மாணவர்களில் பெரிய மாணவர்களுக்கு உள்ளேயும், இளம் தாய்மார்களோடும் நடத்தை சிக்கல்கள் தோன்றுகின்றன என்று அவர் கூறுகினார்.
 
இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதன் பின்னால் இருக்கும் நோக்கத்தை பலர் நியாயப்படுத்தி இருக்கின்றனர்.
 
“இது பற்றி என்னுடைய உளவியல் பார்வையிலான கருத்து தெரிவிக்க நான் வல்லுநர் இல்லை. ஆண்களின் பள்ளியில் 6000 மாணவர்ளோடு பணியாற்றி கிடைத்த என்னுடைய தனிப்பட்ட அனுபவம் இது“ என்று கூறுகிற ஃபவாஸ் முலாஃபர், “அடக்கிய, பொங்கி எழும் ஹார்மோன்களின் சக்தியை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்பதை தான் தன்னால் கூற முடியும்” என குறிப்பிடுகிறார்.
 
ஆனால் பெண்கள் பற்றிய ஏற்கெனவே பிற்போக்கான அணுகுமுறைகளாக இருப்பவற்றை எதிர்க்கின்ற முறை இதுவல்ல என்று பலரும் கூறினர். பிரச்சனை பெண்கள் எவ்வாறு உடை அணிகிறார்கள் என்பதில் இல்லை. ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதில் தான் பிரச்சனை உள்ளது.
 
ஓர் இளம் தாயான துஷாந்தி பொன்வீரா என்பவர் இந்த அறிவிப்பு “வருத்தம்” அளிப்பதாக தெரிவித்தார்.
 
“அடுத்த தலைமுறையின் வழிகாட்டிகளாக நாம் நம்முடைய சிந்திக்கும் முறையை மாற்றாவிட்டால், எதிர்காலம் இருண்டதாகவே தோன்றுகிறது. இத்தகைய நிபந்தனைகள் எதுவுமே இல்லாத பள்ளியை தேர்ந்தெடுத்து விட்டால், இந்த நிபந்தனைகள் தொடரப் போவதில்லை என்று பொருளல்ல. இதுவே உண்மையான பிரச்சனை” என்று அவர் கூறுகிறார்.