1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (13:40 IST)

ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கும் ஐ.நா தலைமைச் செயலாளர்

Putin
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதினை மாஸ்கோவில் இன்று மாலை சந்திக்க உள்ளார்.


போரை நிறுத்துவதற்கு தற்போது வரை எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு குறித்த எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. இருவருக்கும் இடையிலான இந்த் பேச்சுவார்த்தையின் போது, யுக்ரேனின் மேரியோபோல் நகரின் மீதான முற்றுகை குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு ரஷ்யா வெற்றியை அறிவித்த போதிலும், ரஷ்யப் படைகள் அசோவ்ஸ்டல் உலோகத் தொழிற்சாலையை கைப்பற்றமுடியவில்லை. அசோவ்ஸ்டலில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்றுவதற்கு ஒரு மனிதாபிமான வழித்தடத்தை உருவாக்க உத்தரவாதம் தர குட்டரஸிடம் யுக்ரேன் வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஐ.நா தலைமைச் செயலாளர் வரும் வியாழன் யுக்ரேன் தலைநகர் கீயவ் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அந்நாட்டு அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கியை சந்திக்கிறார்.

இதற்கிடையே, அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் யுக்ரேன் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க உள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டின் ஜெர்மனியில் பேச்சு நடத்துகிறார்.

யுக்ரேன் அமைதி முயற்சிகளை கெடுத்து வருவதாகவும், இதனால், மூன்றாம் உலகப் போர் அபாயம் "தீவிரமாக" உள்ளது என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் எச்சரித்துள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த யுக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமித்ரோ குலேபா லாவ்ரோவ் ''உலகை அச்சுறுத்த முயற்சிக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.