வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (23:46 IST)

சீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை

சீனாவில் நல்லடக்கம் செய்வதற்கு சில மாகாணங்களில் தடை உள்ளதுபட 
சீனாவிலிருக்கும் சில மாகாணங்களில் இறந்தவர்களை புதைக்க தடை உள்ளது. அதையும் மீறி இறந்தவரின் விருப்பப்படியே ஆவரை புதைக்க வேண்டும் என்பதற்காக, டவுன் சிண்ட்ரோம் எனப்படும் குறைபாடுள்ள ஒருவர், கடத்தி கொலை செய்யப்பட்டு இறந்தவருக்கு பதிலாக எரியூட்டப்பட்டு இருக்கிறார்.
 
தென் கிழக்கு சீனாவின் ஷான்வீ பகுதியைச் சேர்ந்த ஒருவர் 2017-ம் ஆண்டு புற்றுநோயால் இறப்பதற்கு முன், தன்னை பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார். சீனாவின் சில பகுதிகளில் இறந்தவர்களை புதைப்பதற்கு தடை உள்ளது.
 
எனவே இறந்தவருக்கு பதிலாக ஒரு பிணத்தை எரித்து விட்டு, இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய அவரது குடும்பம் ஒரு நபருக்கு பணம் கொடுத்தது.
 
குடும்பத்தினர் பணம் கொடுத்த நபர் ஒரு பிணத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு பதிலாக, அவரே ஒருவரை கொலை செய்து, அந்த உடலை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் கொடுத்திருக்கிறார்.
 
கடந்த ஆண்டு, செப்டம்பரில் அக்குடும்பத்தினர் பணம் கொடுத்து பிணத்தை ஏற்பாடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் பணம் கொடுத்த நபரின் பெயர் ஹுவாங் என்றும் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மேல்முறையீடு செய்ய ஏதுவாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
2017ஆம் ஆண்டில் கொலை சம்பவம் நடந்திருந்தாலும், கடந்த வாரம் வெளியான ஒரு கட்டுரை மூலம் தான், சீனாவின் இணைய உலகில் இந்த வழக்கு அதிக கவனத்தை ஈர்த்தது.
 
2017ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தினர் தங்கள் உறவினரின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒரு இறந்த உடலை எரியூட்ட, ஏற்பாடு செய்ய ஹுவாங் என்பவருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
 
அக்குடும்பம், குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷான்வீ நகரில் வாழ்ந்து வருகிறது. அம்மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்ட மட்டுமே அனுமதிக்கப்படும்.
 
பணம் வாங்கிக்கொண்ட ஹுவாங் சாலைகளில் உள்ள குப்பைகளை பொறுக்கி கொண்டிருந்த டவுன் சிண்ட்ரோம் குறைபாடுள்ள ஒரு நபரை கண்டு, அவரைத் தன் காரில் ஏறச் சொல்கிறார். பிறகு அந்த நபருக்கு அவர் இறக்கும் வரை மதுபானம் வழங்குகிறார்.
 
அந்த நபர் இறந்த பின் அவரை ஒரு சவப்பெட்டியில் வைத்து சில நாட்களுக்குப் பிறகு, பணம் கொடுத்த குடும்பத்திடம் கொடுக்கிறார். அக்குடும்பம் அவருக்கு இடைத்தரகர் மூலமாக 1,07,000 யுவான் பணத்தை கொடுக்கிறார்கள். அந்த இடைத்தரகர் பின்னாளில் இறந்து விடுகிறார்.
 
பிணத்தை மாற்றுவது
பிணத்தை வாங்கிக் கொண்ட குடும்பம், கொல்லப்பட்டவரின் உடலை தங்கள் உறவினர் இறந்தது போலவே எரியூட்டி இருக்கிறார்கள்.
 
அதன் பிறகு இறந்த உறவினரை, அவரது குடும்பம் ரகசியமாக பாரம்பரிய முறையில் நல்லடக்கம் செய்திருக்கிறது.
 
டவுன் சிண்ட்ரோம் குறைபாடோடு வாழ்ந்து வந்த நபர் 2017 ஆம் ஆண்டு காணாமல் போன பின், அவரைக் காணவில்லை என்றே அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டது.
 
சீனாவுடன் கூட்டணி அமைக்கும் இரான்: அமெரிக்காவை சமாளிக்கவா?
 
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் துப்பு துக்கி குற்றவாளியை பிடிக்க இரண்டு வருடங்களுக்கு மேல் ஆனது. கீழமை நீதின்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்டு அது மேல்முறையீடு செய்ய ஏதுவாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், குவாங்டாங் உயர் நீதிமன்றம் ஹுவாங்கின் தண்டனையை இடைநிறுத்திய உத்தரவை உறுதிப்படுத்தியது.
 
இதன்படி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஹுவாங் இரண்டு வருடங்களுக்குப் பிறகு எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்றால், அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும்.
 
இந்த வழக்கில், ஹுவாங்குக்கு பணம் கொடுத்து வேறொரு இறந்தவரின் உடலை ஏற்பாடு செய்யுமாறு கூறிய குடும்பம், சடலத்தை அவமதித்த குற்றத்தில் ஈடுபட்டதாக கூறிய நீதின்றம், அவர்களுக்கு எந்த தண்டனையும் விதிக்கவில்லை. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
 
இறந்தவர்களை எரியூட்டக் கூறும் சீனா:
 
சீனாவில் பாரம்பரிய முறைப்படி இறந்தவர்களைப் புதைக்கவே பலரும் விரும்புகிறார்கள். இறந்தவர்களுக்கான சவப்பெட்டி மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு அதிக அளவில் பணத்தை அவர்கள் செலவழிப்பார்கள். அப்படிச் செய்வது தங்களின் முன்னோர்களுக்குச் செய்யும் மரியாதையாக கருதுகிறார்கள் சீனர்கள்.
 
ஆனால் சீன அரசாங்கம் இறந்தவர்களை எரியூட்டுமாறு பிரசாரம் செய்து வருகிறது. சீனாவின் சில பிராந்தியங்களில் இறந்தவர்களை புதைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
சீனாவில் இருக்கும் நிலத்தை சேமிப்பதற்கும், இறுதி சடங்கிற்காக பெரிய அளவில் செலவழிப்பதை குறைக்கவும் சீனா இப்படிக் கூறி வருகிறது.
 
சீனாவில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் மிக குறைவாக நிலம் இருக்கும் பிராந்தியங்களில் இறந்தவர்களை எரியூட்ட வேண்டும் என 1997 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட சட்டம் கூறுகிறது
 
அப்படி இல்லாத பிராந்தியங்களில் இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்யலாம் எனவும் அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
 
இப்படி இறந்த உடல்களை மாற்றுவது சீனாவில் ஒன்றும் புதிதல்ல. இப்படிப்பட்ட சம்பவங்கள் சீனாவின் கிராமப்புறங்களில் நடக்கும். அங்கு இன்னமும் மக்கள் பாரம்பரிய முறைப்படி இறந்தவர்களை நல்லடக்கம் செய்யவே விரும்புகின்றனர்.