1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (20:28 IST)

மகாராஷ்டிரா, ஹரியாணா எக்சிட்போல்: ஆட்சியை பிடிக்கப்போவது யார்? - கணிப்புகள் சொல்வதென்ன?

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (திங்கள்கிழமை) ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

மகாராஷ்டிரா - கருத்துக்கணிப்பு முடிவுகள்

நியூஸ் 24 - டைம்ஸ் நவ் ஆகியவற்றின் கணிப்பின்படி, மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் பாஜக - சிவசேனா கூட்டணியும், 48 தொகுதிகளில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில், மகாராஷ்டிராவில் ஆளும் கட்சி தலைமையிலான கூட்டணி 166 - 194 தொகுதிகளிலும், எதிர்க்கட்சி 72 - 90 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிஎன்என் நியூஸ் 18 - ஐபிஎஸ்ஓஎஸ்-இன் கருத்துக்கணிப்பின்படி, 243 தொகுதிகளில் பாஜக கூட்டணியும், 41 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், பல்வேறு கருத்துக்கணிப்புகளை மையமாக கொண்டு செய்யப்பட்ட தங்களது கணக்கீட்டின்படி, மகாராஷ்டிராவில் 211 தொகுதிகளில் பாஜக கூட்டணியும், 64 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெறும் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளிலும், மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரியாணா - கருத்துக்கணிப்பு முடிவுகள்

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பின்படி, ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பாஜகவும், 11 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா நியூஸ் - போல்ஸ்ட்ராட் கருத்துக்கணிப்பில், ஹரியாணாவில் பாஜக 75-80 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9-12 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி - ஜன் கி பாத்தின் கருத்துக்கணிப்பின்படி, 52-63 தொகுதிகளில் பாஜகவும், 15-19 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பில், பாஜக 72 இடங்களிலும், காங்கிரஸ் எட்டு இடங்களிலும் வெற்றிபெறும் என்று தெரியவந்துள்ளது.

அதே சமயத்தில், பல்வேறு கருத்துக்கணிப்புகளை மையமாக கொண்டு செய்யப்பட்ட தங்களது கணக்கீட்டின்படி, ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் 66 தொகுதிகளில் பாஜகவும், 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெறும் என்று என்டிடிவி தொலைக்காட்சி கூறுகிறது.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளிலும், ஹரியாணாவில் பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல்


மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஹரியாணாவில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இரண்டு மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் பதிவு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா - சிவசேனா ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகியன மற்றொரு அணியாகவும் போட்டியிட்டுள்ள இந்த தேர்தலில் மொத்தம் 8.94 கோடி பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

அதேபோன்று, 90 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ஹரியாணாவில் காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சி இரண்டும் நேரடியாகப் போட்டியிட்டன. ஹரியாணாவை பொறுத்தவரை, மொத்தம் 1.82 கோடி பேர் வாக்களிக்கும் தகுதியை பெற்றிருந்ததாக தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.