அல்கைதாவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண்களுக்கு சிறை - சவுதி
அல்கைதா இயக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றத்திற்காக சவுதி அரேபியாவில் பெண்கள் நால்வருக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
தங்களின் மகன்மார் ஜிஹாத் போராளிகளாவதற்கு உதவிய குற்றச்சாட்டும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்தப் பெண்களுக்கு 4 முதல் 10 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட இணையதளங்களுக்குள் பிரவேசித்து போராட்டம் தொடர்பான விடயங்களை தரவிறக்கம் செய்தமை தொடர்பிலும் இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சவுதி பிரஜைகள் ஜிஹாத் குழுக்களில் இணைவதை தடுப்பதற்காக கடந்த ஆண்டில் சவுதி அரசாங்கம் கடுமையான புதிய தண்டனைகளை அறிவித்திருந்தது.
இணையதளத்தில் சமூக மற்றும் அரசியல் ரீதியான கருத்துக்களை வெளியிடுவோரையும் இந்த புதிய சட்டங்கள் இலக்குவைப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.