1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 16 டிசம்பர் 2014 (18:52 IST)

பாகிஸ்தானில் தாலிபான் தாக்குதல்: பள்ளிச் சிறார்கள் உட்பட 126 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கே பெஷவார் நகரில் தாலிபான்கள் நடத்தியத் தாக்குதலில் 126 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.
பெஷாவர் பகுதியில் இராணுவத்தால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றைக் கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறார்கள் என கைபர் பக்தூன்க்வா மாகாண முதல்வர் கூறினார்.
துணை இராணுவப் படையினர் போல உடையணிந்த ஐந்து அல்லது ஆறு பேர் அந்தப் பள்ளிக்கூடத்தில் நுழைந்து கண்மூடித் தனமாகத் தாக்குதல் நடத்தினர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த முற்றுகை மற்றும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினர் முயற்சிகளை செய்து வருகின்றனர்.
வடக்கு வாசிரிஸ்தான் மற்றும் கைபர் பிராந்தியத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பாகிஸ்தானியத் தாலிபானின் பேச்சாளர் கூறியுள்ளார்.
 
இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கண்டித்துள்ளார்.