ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj

கொரோனா வைரஸ் தொற்று: இரான் கூறியதைவிட மும்மடங்கு இறப்புகள் - உண்மை என்ன?

இரான் அரசு வெளியிட்ட தரவுகளை விட அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என பிபிசி பாரசீக மொழி சேவை நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.

இரான் அரசைப் பொறுத்தவரை, ஜூலை 20ம் தேதி வரை 42,000 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஆனால் அந்நாட்டு சுகாதார துறை 14,405 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறுகிறது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அரசாங்கம் தெரிவிக்கும் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

2,78,827 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட வேளையில் அங்கு 451,024 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரானும் ஒன்று.

கடந்த சில வாரங்களாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்குப் பல மடங்கு அதிகரித்து வருகிறது.

கூறிய தகவலும், உண்மையும்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஜனவரி 22ம் தேதி என பிபிசியிடம் வழங்கப்பட்ட மருத்துவ ஆதாரங்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், பிப்ரவரி மாதம்தான் கொரோனா வைரஸால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டதாக முன்பு இரான் கூறி இருந்தது.

இரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவ தொடங்கியது முதல் அந்நாட்டில் வெளியிடப்படும் அதிகாரபூர்வ தரவுகள் மீதான சந்தேகம் பல நிபுணர்களுக்கு இருந்தன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாற்றி மதிப்பிட்டு வெளியிடுகின்றனர் என உள்ளூர் அதிகாரிகள் சிலர் அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் பெரிய அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படாததால் உண்மையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாகக் கணிக்கப்படவில்லை என உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதும், தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டே அரசாங்கம் வெளியிட்டுள்ளது.