வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 4 ஜனவரி 2017 (16:42 IST)

விரைவில் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: சசிகலா தரப்பு கலக்கம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்பட உள்ளதால் சசிகலா தரப்பு கலக்கத்தில் உள்ளது.


 

வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு குறித்தான மேல்முறையீட்டில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றத் தனி நீதிபதி குமாரசாமி, முழுமையாக ரத்து செய்தார்.

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை குறைத்துக் கணக்கிட்டும், அரைகுறையாக விசாரணை நடத்தியும் நீதிபதி குமாரசாமி இந்த தீர்ப்பை வழங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் கர்நாடக அரசு ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், சுப்பிரமணியசாமி ஆகியோர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட - நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அவரவர் தரப்பு இறுதி வாதங்களை விரைவாகவும், சுருக்கமாகவும் எடுத்து வைக்க உத்தரவிட்டது.

அதன்படி கர்நாடக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, க.அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனா, ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவ், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆகியோர் வாதங்களை எடுத்து வைத்தனர்.

கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தனது வாதத்தைத் எடுத்து வைத்தார். இதன்பிறகு சுப்பிரமணிய சாமியும் தனது எழுத்துப் பூர்வ வாதத்தை சமர்ப்பித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, திடீர் மரணம் அடைந்ததால், மீதமுள்ள குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படும்.

இவ்வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்பார் என கருதப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு எதிர்மறையாக அமைந்தால் என்ன செய்வது என்று சசிகலா தரப்பு கலக்கத்தில் உள்ளதாக தெரிகிறது.