வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (16:07 IST)

வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு.! விரைவில் இடைக்கால அரசு..! ராணுவம் அறிவிப்பு..!!

Bangladesh Parliment
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.
 
1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்த வங்கதேசம் தனி நாடாக உருவெடுத்தது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு வங்கதேச அரசு சார்பில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்தங்கிய மாவட்டங்கள், பெண்கள், சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடானது வழங்கப்பட்டது.
 
இதன்படி, பல்வேறு பிரிவினருக்கு 56 விழுக்காடு இடஒதுக்கீடும், பொதுப் பிரிவினருக்கு 44 விழுக்காடு இடஒதுக்கீடும் அமலில் இருந்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து வங்கதேச கல்லூரி மாணவர்கள் கடந்த ஜூன் மாதம் போராட்டத்தை கையில் எடுத்தனர். இதில் இருநூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் இரண்டாயிரம் பேர் படுகாயமடைந்தனர்.
 
இது தொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி, வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை ஐந்து விழுக்காடாக குறைத்தது. சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு 2 விழுக்காடு ஒதுக்கவும் உத்தரவிட்டது. இதன்படி கல்வி, அரசுப் பணிக்கான இடஒதுக்கீடு 7 விழுக்காடாக குறைக்கப்பட்டது. மீதமுள்ள 93 விழுக்காடு பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் மாணவர்களின் போராட்டம் ஓய்ந்தது.
 
இதனிடையே போராட்டத்தை முன்னின்று நடத்திய ஆறு பேரை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததாகவும், அதில், மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் நஷித் கான், ஆசிப் முகமது, அபுபக்கர் மஜும்தார் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவியதால், வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் மீண்டும் வலுத்தது.
 
பிரதமர் ஷேக் ஹசீனா உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் ஏற்பட்ட மோதலில் கடந்த சில நாட்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தலைநகர் டாக்கா உட்பட நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. 

டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் அவாமிலீக் கட்சி அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. வங்கதேச தந்தை முஜிபுர் ரகுமானின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது. கலவரம் அதிகரித்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தனது குடும்பத்தினருடன் டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு, டெல்லியில் தஞ்சம் புகுந்தார்.

Hasina
இதைத் தொடர்ந்து வங்கதேச நாடு ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர மாணவர் அமைப்புடன் ராணுவ அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். நாடாளுமன்றத்தை இன்று பிற்பகல் 3 மணிக்குள் கலைக்க வேண்டும் என்று மாணவர் அமைப்பு கெடு விதித்திருந்தது.


இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வங்கதேச ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் இடைக்கால அரசை விரைந்து அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.