எனக்குக் காப்பிரைட் பணமெல்லாம் வேணாம்.. இதுவே போதும்- இசையமைப்பாளர் தேவா!
தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் அறிமுகம் ஆகி 90 களிலும் 2000 களின் தொடக்கத்திலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் தேவா. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தமிழ் சினிமா சந்தையில் இருந்து வெளியேறினார். இப்போது பல ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் கச்சேரிகள் மூலமாகக் கம்பேக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் பேசும்போது தெரிவித்த கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “எனக்கு காப்பிரைட் பணமெல்லாம் வேண்டாம். நான் காப்பி ரைட் கேட்காததால்தான் என் பாடல்களை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். அது இளைஞர்களிடம் சென்று சேர்கிறது. கரு கரு கருப்பாயி பாடல் எல்லாம் இப்போது இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை கேட்டு, நான்தான் அதன் இசையமைப்பாளர் என்பது தெரிகிறது.
அதனால் எனக்கு இந்த புகழே போதும். குழந்தைகள் என் பாடலை ரசிப்பதைப் பார்ப்பது எனக்கு பணத்தை விடப் பெரியது” எனக் கூறியுள்ளார்.