ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (16:55 IST)

பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்.. தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் நடவடிக்கை தேவை.!!

cm letter
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 
இது தொடர்பாக மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் கைது மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.  28 நாட்களில் மட்டும்  நடந்த ஆறு சம்பவங்களில் 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 12 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 77 தமிழக மீனவர்கள் மற்றும் 151 படகுகளை  விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 
 
ஜனவரி 3ஆம் தேதி பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குவைத் கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

 
மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்