புதன், 16 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (10:29 IST)

காற்றழுத்த மண்டலம் கரையை கடப்பது எங்கே? வானிலை மையம் தகவல்

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு கரையை கடப்பது எந்த இடத்தில் என்பது குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
 
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தற்போது சென்னைக்கு 460 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
 
இந்த காற்றழுத்த தாழ்வு மையம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
 
ஆனால் தற்போது புயல் சின்னம் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி செல்வதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 
 
மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரமாக 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு வருவதாகவும் எனவே ஆந்திராவில் தான் இந்த புயல் கரையை கடக்கும் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை உள்பட சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran