104 வயதான பஞ்சாப் மெயில்
“பஞ்சாப் மெயில்”, தனது 104 ஆண்டுகள் ரயில் சேவையை நிறைவு செய்த முதல் ரயில் என்ற பெருமைக்குரியது.
மும்பையிலிருந்து பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் நகருக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் "பஞ்சாப் மெயில்' தனது 104 ஆண்டுகள் ரயில் சேவையை நிறைவு செய்த முதல் ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
சுதந்திரம் அடைவதற்கு முன்பு "தி பஞ்சாப் லிஹடெட்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட "பஞ்சாப் மெயில்' ரயில் சேவை மும்பையிலிருந்து பெஷாவர் (தற்போது பாகிஸ்தானில் உள்ள நகரம்) வரை சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தெளிவான தகவல் கிடைக்காத காரணத்தால், இந்த ரயில் சேவை எப்போது தொடங்கப்பட்டது என்ற தகவல் இல்லை. எனினும், "பஞ்சாப் மெயில்' தில்லிக்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்ததாக பயணி ஒருவர் கடந்த 1912ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.
இதுபோன்று கிடைத்த சில ஆவணங்களின்படி, கடந்த 1912ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, மும்பையிலிருந்து ஃபிரோஸ்பூருக்கு பஞ்சாப் மெயில் சேவை முதன்முதலாக தொடங்கப்பட்டது என்பதை அனுமானிக்க முடிகிறது.