இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழ வேண்டும் என்றால் மாட்டு இறைச்சி உண்ணக் கூடாது: ஹரியானா முதல் அமைச்சர்
இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழ வேண்டும் என்றால் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்று ஹரியானா முதல் அமைச்சர் மனோகர் லால் காட்டர் பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதாகக் கூறி இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழ வேண்டும் என்றால் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்று ஹரியானா முதல் அமைச்சர் மனோகர் லால் காட்டர் தெரிவித்துள்ளார்.
மனோகர் லால் காட்டரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராஷித் ஆல்வி கூறுகையில், " இத்தகைய கருத்தை தெரிவித்ததன் மூலம் முதல் அமைச்சர் பதவியை வகிப்பதற்கான தார்மீக உரிமையை மனோகர் லால் இழந்துவிட்டார்" என்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஆஸ்டோஸ் கூறுகையில், " மனோகர் லால் ஹரியானா மாநிலத்தின் முதல் அமைச்சர். அவருக்கு அரசியல் சாசனம் குறித்து தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் புத்தகத்தை மட்டுமே அவர் படிக்கிறார். அவரது அறிவின்மை தமக்கு அனுதாபத்தை ஏற்படுத்துகிறது " என்று கூறினார்.