வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (12:04 IST)

இந்தியாவில் அறிமுகமாகிறது ஹைட்ரஜன் ரயில்.. ரூ.2800 கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் விரைவில் ஹைட்ரஜன் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக, இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 2800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், முதல் ஹைட்ரஜன் ரயிலின் சோதனை இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல ஐரோப்பிய நாடுகள் ஹைட்ரஜன் ரயிலுக்கு மாறி வருகின்றன, இந்நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலும் ஹைட்ரஜன் ரயிலை முழுவதுமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் சோதனை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், டெல்லியில் இந்த ரயில் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் டெல்லி கோட்டத்தில் இயக்கப்படும் என்றும், இந்த ரயில் சோதனை டிசம்பர் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் எனவும் ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக மத்திய அரசு 35 ஹைட்ரஜன் ரயில்களுக்கு 2,800 கோடி ரூபாய் ஒதுக்கி, ஹைட்ரஜன் தொடர்பான உள்கட்டமைப்புக்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


Edited by Mahendran