1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 15 ஜூன் 2015 (11:03 IST)

சிறுவர்-சிறுமிகளை கடத்திச்சென்று பிச்சை எடுக்க வைத்த பெண்கள்

சிறுவர்-சிறுமிகளை கடத்திச்சென்று ஒடிசா ரயில் நிலையங்களில் பிச்சை எடுக்க வைத்த 8 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
ஒடிசா ரயில் நிலையங்களில் சிறுவர்-சிறுமிகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதாக ஒடிசாவை சேர்ந்த தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து ரயில்வே காவல்துறையினருக்குப் புகார்கள் வந்தது. 
 
இதைத் தொடர்ந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
 
அப்போது ரயில் நிலையத்தில் சில சிறுவர்-சிறுமிகள் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களை மீட்ட காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
 
அந்த கவிசாரணையில் அவர்களை பெண்கள் சிலர் கடத்திச் சென்று பிச்சை எடுக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட 5 பேரும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
 
மீட்கப்பட்ட சிறுவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தமிழகம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வசந்தா, மஞ்சுளா, ஜெயம்மா, உபம்மா, வெங்கடம்மா, சியந்தம்மா, முனியம்மா, சுசீலா ஆகிய 8 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மீட்கப்பட்ட சிறுவர்-சிறுமிகள் யார்? அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட பெண்கள் சிறுவர்-சிறுமிகளை மாற்றுத்திறனாளிகளாக நடிக்க வைத்து பிச்சை எடுக்க வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது.