1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (12:11 IST)

சுதந்திர தினத்திலும் ஏவுகணை தாக்குதல் – உக்ரைனில் 22 பேர் பலி!

மத்திய உக்ரைன் டினிப்ரோ பெட்ரோவஸ்க் பகுதியில் உள்ள சாப்லினோ ரயில் நிலையத்தில் ரஷிய படையினர் ஏவுகணை தாக்குதல்.


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 6 மாதங்களாகி விட்ட நிலையில் உக்ரைன் தனது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது. சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக இருந்த உக்ரைன் 1991 ஆம் ஆண்டு சோவியத்திலிருந்து பிரிந்து தனி நாடு அங்கீகாரம் பெற்றது. சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த தனி நாடான நாளை ஆண்டுதோறும் ஆகஸ்டு 24 ஆம் தேதி உக்ரேன் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது.

ஆனால் தற்போது உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் போருக்கு நடுவே தனது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது உக்ரைன். இந்த சுதந்திர தின உரையில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நீங்கள் எந்த ராணுவத்தை வைத்திருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் எங்கள் நிலத்தை மட்டுமே கவனிக்கிறோம். பயங்கரவாதிகளுடன் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். எங்களுக்கு உக்ரைன் என்பது 25 பிராந்தியங்களும் ஒன்றினைந்த தேசம்தான். உக்ரைன் இறுதி வரை போராடும் என கூறியுள்ளார்.

இதற்கிடையில் மத்திய உக்ரைன் டினிப்ரோ பெட்ரோவஸ்க் பகுதியில் உள்ள சாப்லினோ ரயில் நிலையத்தில் ரஷிய படையினர் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலின் 5 பெட்டிகள் எரிந்து சேதமானது.

இந்த தாக்குதலில் 22 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த சிலர் கவலைக்கிடமாக உள்ள நிலையில் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கூடும் என அஞ்சப்படுகிறது.