1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (11:24 IST)

உயிருடன் இருப்பதே குற்றவுணர்ச்சியாக இருக்கப் போகிறது… யாஷிகாவின் இன்ஸ்டா பதிவு!

விபத்துக்குப் பின்னர் நடிகை யாஷிகா ஆனந்த் தனது முதல் சமூகவலைதளப் பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  மேலும் யாஷிகா சுய நினைவுக்கு வந்த பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என போலிஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த யாஷிகா ஆனந்த் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்தே அவர் சிகிச்சையை தொடரப்போவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் சில மாதங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் அவர் ஒத்துக்கொண்டு நடித்து வரும் படங்களின் வாய்ப்புகள் பறிபோக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்றிரவு அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘உயிரோடு இருப்பதே என்றென்றும் குற்ற உணர்ச்சியாக இருக்கப் போகிறது. விபத்தில் இருந்து என்னைக் காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என் உயிர்த்தோழியை எடுத்துக் கொண்டதற்காக குற்றம் சொல்வதா எனத் தெரியவில்லை. நீ என்னை மன்னிக்கவே மாட்டாய் என்று எனக்கு தெரியும். என்னை மன்னித்து விடு. உன் குடும்பத்தினருக்கு கையறு நிலையை ஏற்படுத்தி விட்டேன். ஒருநாள் உன் குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். என்றென்றும் நம் நினைவை பாதுகாப்பேன்.’ எனக் கூறியுள்ளார்.