வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (08:20 IST)

அரசு வழிமுறைகளோடு பாதுகாப்பாக படப்பிடிப்பு நடத்துவோம்… தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

தமிழக அரசு கொரோனா கால லாக்டவுனுக்குப் பிறகு 100 பேருக்கு மிகாமல் குழுவினரை வைத்து படப்பிடிப்பை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

இது சம்மந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். இந்தச் சூழ்நிலையில் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகளை துவக்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து திரை உலகைக் காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வரிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்து மனு கொடுத்தோம். அதன் முதல்படியாக தமிழக முதல்வர் 100 நபர்களுக்குள் குழுவினரை வைத்து படப்பிடிப்பு துவக்கலாம். படப்பிடிப்பிற்கு பிந்தைய வேலைகளையும் நடத்தலாம் என ஆணை பிறப்பித்துள்ளார். தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, சானிடைசரை உபயோகப்படுத்தி, தடுப்பூசி போட்டுக்கொண்டு படப்பிடிப்புகளை நடத்திட வேண்டுமாய் தயாரிப்பாளர்களையும் படக்குழுவினரையும் கேட்டுக்கொள்கிறோம். மற்ற கோரிக்கைகளையும் தமிழக முதல்வர் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையோடு மீண்டும் படப்பிடிப்புகளை துவக்குவோம்’ எனக் கூறியுள்ளார்.