வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (12:01 IST)

எஸ் பி பிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை? மருத்துவர்கள் ஆலோசனை!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்துக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஆலோசனை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட்  5 ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் மோசமானதை அடுத்து அவருக்கு வெண்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ ஆகிய கருவிகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தினமும் எஸ் பி பி உடல்நிலை பற்றி அவர் மகன் எஸ் பி சரண் தெரிவித்து வந்தார்.

இதையடுத்து இப்போது எஸ் பி பியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என்றும் சரண் தெரிவித்திருந்தார். அதன் படி நேற்று ஒரு வீடியோ வெளியிட்ட அவர் தந்தை எஸ் பி பிக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாக கூறினார்.

மேலும் ஐபேட்டில் கிரிக்கெட் டென்னிஸ் பார்த்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிசியோதெரவி சிகிச்சை பெற்றுவருகிறார் என்றும் அவரது நுரையீரல் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை என்றும் அதற்காகதான் இன்னும் வெண்ட்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது எனவும் கூறி இருந்தார். இந்நிலையில் இப்போது எஸ் பி பிக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது.