வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (10:35 IST)

இந்தியின் மாஸ்டர் ஆகுமா சல்மான் கானின் ராதே? திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி!

பிரபுதேவா சல்மான் கூட்டணி பாலிவுட்டின் வெற்றிக் கூட்டணியாக கருதப் படுகிறது. இவர்களின் கூட்டணி நான்காவது முறையாக ராதே திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தில் திஷா பட்டாணி, ரந்தீப் கூடா மற்றும் தமிழ் நடிகர் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கொரிய திரைப்படம் ஒன்றின் ரீமேக் ஆகும்.

இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இன்னும் ரிலீஸாகவில்லை. இதனால் படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. இதை மறுத்துள்ள சல்மான் கான் ’சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு இந்த திரைப்படம் வெளியாகும். படத்தின் ரிலீஸை விட படம் பார்ப்பவர்களின் பாதுகாப்பே முக்கியம்’ எனக் கூறியிருந்தார்.

ஆனால் இப்போது படத்தை ஒட்டுமொத்தமாக ஜி ஸ்டூடியோஸுக்கு 230 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் ராதே திரைப்படம் ஓடிடியில் ரிலிஸாகுமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து திரையரங்க உரிமையாளர்கள் சேர்ந்து சல்மான் கானுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ராதே திரைப்படத்தை திரையரங்குகளில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து இப்போது சல்மான் கான் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘திரையரங்க உரிமையாளர்களின் நிதி நெருக்கடி உணர்ந்து அவர்களுக்கு உதவ நினைக்கிறேன். ராதே திரைப்படம் ஈகை திருநாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும். அதற்கு பதிலாக திரையரங்க உரிமையாளர்கள் படத்தைக் காண வரும் ரசிகர்களின் நலனில் உச்சபட்ச அக்கறை காட்டவேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.