1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 15 ஜூன் 2024 (07:59 IST)

கடல் மட்டத்தில் இருந்து 33000 அடி உயரத்தில் ஆக்‌ஷன் காட்சி… பிரம்மாண்டத்துக்கு தயாராகும் சல்மான் கான்& முருகதாஸ்!

தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது.

இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இம்மாதம் 18 ஆம் தேதி இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் ஒரு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சியை முதலில் படமாக்க முடிவு செய்துள்ளதாம் படக்குழு. கடல் மட்டத்தில் இருந்து 33000 அடி தொலைவில் விமானத்தில் நடக்கும் ஆக்‌ஷன் காட்சியாக இதைப் படமாக்க உள்ளார்களாம்.