1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (15:34 IST)

விதி விளையாடிவிட்டது… வடிவேலுவின் நாய்சேகர் தோல்வி பற்றி பேசிய நகைச்சுவை நடிகர்!

வடிவேலுவுடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலம் ஆனவர் முத்துக்காளை.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆனது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களைக் கவரவில்லை. படம் பார்த்த ரசிகர்களை படம் பெரியளவில் திருப்திப் படுத்தவில்லை என்று சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். இதனால் படம் தோல்விப் படமாக அமைந்தது. இதனால் வடிவேலு இனிமேல் கதாநாயகனாக நடிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தோல்வி பற்றி பேசியுள்ள நகைச்சுவை நடிகர் முத்துக் காளை “விதி விளையாடிவிட்டது. முன்பெல்லாம் வடிவேலு கூட நடிக்கும் நடிகர்கள், அவருக்காக நடித்தோம். இப்போது அவர் கூட இருப்பவர்கள் தங்களுக்காக நடிக்கிறார்கள். வடிவேலு எப்படி நடித்தாலும், அதை மக்கள் ரசிப்பார்கள் என்ற எண்ணம். இப்போது மக்கள் மாறிவிட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.