1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 30 மே 2015 (12:28 IST)

இயக்குனர்கள் சங்கத்தில் பாலசந்தர் பெயரில் திரையரங்கம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் பாலசந்தர் அரங்கம் திறக்கப்பட்டது. 
 
உதவி இயக்குனர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், அவர்கள் இயக்கிய குறும்படங்களை திரையிடுவதற்காகவும், கிரீன் மேட் மற்றும் போட்டோ சூட் செய்வதற்கும் இயக்குனர்கள் சங்க கட்டிடத்தில் மினி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த திரையரங்கிற்கு இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் நினைவாக இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டு, இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் இன்று திறக்கப்பட்டது.
 
பின்னர் இயக்குனர் சந்திரசேகரன், பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சிறு குறும்படத்தை முதன் முதலாக திரையிட்டார். அதன்பின் பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய குறும்படத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு திரையிட்டார். நாற்பது உதவி இயக்குனர்கள் குறும்படங்களை இயக்கி உள்ளார்கள். அதில் இரண்டு குறும்படங்கள் இன்று திரையிடப்பட்டது.

இரண்டு படங்களும் சிறந்த படங்கள் என்று இயக்கிய உதவி இயக்குனர்களை இயக்குனர் இமயம் பாரதிராஜா பாராட்டினார். பாலசந்தர் தமிழ் திரையுலகில் பல வெற்றிகளை கண்டவர். பல சாதனைகளை பதிவு செய்தவர். அவரைப் போலவே இளம் இயக்குனர்களும், நாளைய இயக்குனர்களும் தங்களது சாதனைகளை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை என்று பாரதிராஜா பேசினார்.
 
விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பி.வாசு, கே.பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு குறும்படங்களை இயக்கிய உதவி இயக்குனர்களை பாராட்டி பேசினார்கள். சங்கத்தின் தமிழ் வெள்ளித்திரை என்ற இணையதளத்தை கே.பாக்யராஜ் துவக்கி வைத்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி.எஸ்.தாணு கலந்து கொண்டு பாலச்சந்தர், பாரதிராஜா இருவரை பற்றிய குறும்படங்களை துவக்கி வைத்தார்.
 
முன்னதாக தலைவர் விக்ரமன் எல்லோரையும் வரவேற்று பேசினார். செயலாளர் ஆர்கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர் இருவரும் சிறப்புரையாற்றினார்கள்.