1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (17:09 IST)

ஜிவி பிரகாஷ் படத்திற்கு இயக்குனர் தங்கர்பச்சான் எச்சரிக்கை!

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் ஜீவி பிரகாஷின் செல்பி படத்திற்கு எச்சரிக்கை என்ற பெயரில் வாழ்த்து அறிக்கையை இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
எச்சரிக்கை!
 
கல்விக்கூடங்கள்‌ பணம்‌ கொள்ளையடிக்கும்‌ கூடங்களாக உருவாக்கப்பட்டப்பின்‌ தமிழ்‌ நாடு அதன்‌ கல்வியின்‌ தரத்தை இழந்து வருகின்றது. இந்த தனியார்‌ கல்விக்கூடங்கள்‌ எப்படிப்பட்ட தரகர்களை உருவாக்கி வைத்துள்ளது. இதில்‌ அப்பாவி பெற்றோர்களும்‌ மாணவர்களும்‌ தொடர்ந்து பலியாகி கொண்டிருக்கிறார்கள்‌ எனும்‌ உண்மையை நேர்த்தியாக பொருள்‌ உரைக்க பதிவு செய்வதுதான்‌ “செல்பி” திரைப்படம்‌.
 
மதிமாறன்‌ எனும்‌ புதிய இயக்குநரின்‌ ஆற்றலும்‌ திறமையும்‌ வியப்பில்‌ ஆழ்த்துகின்றன. அதேபோன்று குணாநிதி எனும்‌ அறிமுக நடிகரின்‌ இயல்பான மனம்‌ கவரும்‌ நடிப்பாற்றல்‌ நம்பிக்கை ஊட்டுகின்றன. ஜிவி பிரகாஷ்‌ முதன்மை பாத்திரத்தை தாங்கி நிற்கின்றார்‌! இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம்‌ அவரின்‌ திரைப்பயணத்தை மேலும்‌ விரிவுப்படுத்தும்‌!
 
முழு திரைக்கதையின்‌ மையப்புள்ளியான எதிர்‌ நாயகன்‌ பாத்திரத்தில்‌ கவுதம்‌ மேனன்‌ நடிப்புதான்‌ இத்திரைப்படத்தின்‌ கருவிற்கு மேலும்‌ வலுவூட்டுகின்றது. திரையில்‌ தோன்றும்‌ அனைத்து நடிகர்களும்‌ சிறு பிசகில்லாமல்‌ நடிப்பது ஒன்றே இயக்குநரின்‌ திறனை பறை சாற்றும்‌. கடலூர்‌ மாவட்ட வட்டார வழக்கு மிக சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மக்களைக்‌ காப்பாற்றுவதாக கூறப்படும்‌ நான்கு தூண்களும்‌ அதன்‌ மீதான நம்பிக்கையினை இழந்து கொண்டிருக்கும்‌ நிலையில்‌ திரைப்படங்கள்‌ தான்‌ அரிதாக எப்பொழுதாவது சமூகத்தின்‌ சிக்கல்‌ சீர்கேடுகள்‌ குறித்து கேள்வி எழுப்புகின்றன. "செல்பி" அதனை திறம்பட செய்திருக்கின்றது. வெறும்‌ பணப்பைகளை நிரப்புவதற்காக மட்டுமே உருவாக்கப்படும்‌ திரைப்படங்களுக்கு இடையில்‌ இப்படைப்பின்‌ வரவு கவனத்துக்குறியது.
 
இவ்வாறு இயக்குனர் தங்கர்‌ பச்சான்‌ ’செல்பி’ திரைப்படம் குறித்து கூறியுள்ளார்.